மே 22, 2010

புரோகிராமிங்கை எளிமையாக்கும் ஒருங்கிணைந்த உருவாக்கச் சூழல்கள்

              நிரலெழுதுவதை எளிமையாக்க ஏகப்பட்ட ஒருங்கிணைந்த உருவாக்கச் சூழல்கள் (IDE's-Integrated Development Environment) உள்ளன.  பெரும்பாலான பிரபல திறமூல மென்பொருட்கள், அனைத்து இயக்கச் சூழல்களிலும் சுதந்திரமாகப் பயன்படுத்துமாறு வெளிவருகின்றது.  சி, சி++, ஜாவா, பி.எச்.பி..., என அடிக்கிக் கொண்டே போகும் நிரல் மொழிகளுக்கு (programming languages) ஏற்றவாறு நிரலாக்க பணித்தளங்களங்களும் திறமூல உலகில் கொட்டிக் கிடக்கின்றது.  நான் பயன்படுத்திப் பார்த்த இரு ஒருங்கிணைந்த உருவாக்கச் சூழல்கள் எக்லிப்சும், நெட்பீன்ஸம் (Eclipse, Netbeans).

இவை இரண்டுமே ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல.  இவற்றிற்கே உரிய தனித்தன்மையான அம்சங்களைப் பெற்றிருக்கின்றன.


பிரபல வணிக மென்பொருட்களுக்கு நிகராக இவற்றின் தரம் இருக்கின்றது.  ஒரு அலுவலகப் பதிப்பாகட்டும் (office suite: MS office, OpenOffice etc..), அல்லது வேறொரு மென்பொருளாகட்டும் அவற்றின் முழு வசதிகளையும் நாம் பயன்படுத்துவதில்லை.  உண்மை என்னவெனில் இவற்றிலிருக்கும் அடிப்படை வசதிகளைக்கூட நாம் அறிந்து வைத்திருப்பதில்லை.

பல மாணவர்களுக்கு விபியும், எச்.டி.எம்.எல் லும் பிடித்திருக்கக் காரணம் தவறாக நிரல் எழுதினாலும் (syntax error) விரைவாக களைந்து விடும் வசதியால்தான். 


ஜாவாவைக் கண்டு பயப்படக் காரணம் அவர்கள் மனப்பாடம் செய்ததை தட்டச்சிடும்போதோ அல்லது அப்படியே பார்த்து ஒரு சாதாரண டெக்ஸ்ட் எடிட்டரில் (Notepad..) எழுதும்போதோ நிறைய பிழைகள் வந்துவிடுகின்றது (நான் அப்படித்தான் பயந்தேன்).


விண்டோசில் நோட்பேடிற்கு பதிலாக நோட்பேட்++ போன்ற மாற்று டெக்ஸ்ட் எடிட்டர்களைப் பயன்படுத்தும் போது நிரல் பல வண்ணங்களில் காட்டப்படும்.  சரியான வண்ணம் வரவில்லையென்றால் அதில் ஏதோ பிழையிருக்கலாம் என யூகித்து விடலாம்.



நிரல் எழுதவதோடு மட்டும் பணி முடிந்து விடுவதில்லை.  அதை இயக்குவதற்கு சில வழிமுறைகளையும் கையாள வேண்டும்.

அது தெரியாவிட்டால் பிறகு சிக்கல்தான்.  ஒரு வெப் சர்வரை நிர்வகிப்பதாகட்டும், அல்லது நிரலை கம்ப்பைல் செய்வது முதல் டேட்டாபேஸில் (தகவல் தளம்) இருக்கும் தகவல்களை எளிய இடைமுகப்பில் அனுகவது வரை எனப் பலத்தரப்பட்ட மென்பொருள் உருவாக்கக் கட்டங்களை (software development phases) ஒரே இடத்தில் செய்தால் எப்படி இருக்கும்.  இதற்கு உதவுவதுதான் ஒருங்கிணைந்த உருவாக்கச் சூழல்கள்.  இவற்றைப் பயன்படுத்தி நிரலெழுதும்போது மொழிக்கூறு பிழைகளை (syntax errors) எளிதாகத் தவிர்த்து விடலாம்.

நான் கணினி அறிவியல் இளங்கலை (Bsc Computer Science) பட்டப் படிப்பு படிக்கும்போது செய்முறை வகுப்புகளிலும், ஜாவா செய்முறைத் தேர்வுகளிலும் ஒருங்கிணைந்த உருவாக்கச் சூழல் மென்பொருட்களை பயன்படுத்த அனுமதிக்குமாறு எவ்வளவு கேட்டுக்கொண்டும் பயனில்லை.  அதற்கு அந்த ஆசிரியரிடமிருந்து வந்த திடுக்கிடும் பதில், ”நிரல் எழுதுவது எளிமையாகிவிட்டால் பிறகு கற்றுக் கொள்வதற்கு என்ன இருக்கிறது ?!”).  பாடங்களைக் கற்றுக் கொள்வதே எளிமையாக புரிந்து கொண்டு அதை செயல்படுத்தி பார்க்கத்தானே.  கல்லூரி அளவிலேயே விழிப்புணர்வு இப்படி இருக்கையில் பள்ளிகளில் கேட்கவா வேண்டும். 

ஒருங்கிணைந்த மென்பொருட்களைப் பயன்படுத்தி நிரலெழுதும்போது நேரமும் மிச்சமாகும், சுயசிந்தனையுடனும் (own idea/creativity) நிரல்களை எழுதமுடியும்.  பள்ளி அளவிலிருந்தே திறமூல மென்பொருட்களைப் பயன்படுத்தவும், எளிமையாக நிரலெழுதுவதற்கானக் கருவிகளைப் பயன்படுத்தவும் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும். 

நாம் வேலைக்கு செல்லும்பொது அங்கு வணிக மென்பொருளைப் பயன்படுத்தினாலும் தற்போது கற்கும் திறமூல மென்பொருட்கள் நல்ல அடித்தளம் அமைக்கும்.  எடுத்துக்காட்டிற்கு வணிக மென்பொருளான சன் ஸ்டூடியோ திறமூல மென்பொருள் தொகுப்பான நெட்பீன்ஸை அடிப்படையாகக் கொண்டது, ஜே2ஈஈ (j2ee) பணித்தளதிற்கு ஏற்ற ஐ.பி.எம் வெப் ஸ்பியர்  ஸ்டூடியோ எக்லிப்ஸை அடிப்படையாகக் கொண்டது.  பகட்டான இணைய மென்பொருட்கள் (RIA - Rich Internet Application) உருவாக்கத்திற்கு பயன்படும் அடோப் நிறுவனத்தின் ப்ளெக்ஸ் மென்பொருளும் எக்லிப்ஸை அடிப்படையாகக் கொண்டதுதான்.